Tuesday, 22 April 2014

ஐடி யில் வேலைபார்க்கும் பெண்கள் மீதான சமூக வன்முறை

ஐடி யில் வேலைபார்க்கும் பெண்கள் கேவலமானவர்கள், ஒழுக்கங்கெட்டவர்கள். ஐடியில் வேலைபார்ப்பவர்களை இதைவிடவும் கேவலமாக முன்னர் (இப்போதும்) கால் "சென்டரில்" வேலை பார்ப்பவர்கள் என்று விமர்சித்திருக்கிறார்கள்.

சரி. இந்த விமர்சனங்களுக்குப் பின்னிருக்கும் இரு தாழ்வு மனப்பாண்மைகளைப் பார்ப்போம்.

முதலில், பெண்களும் கைநிறைய சம்பாதிக்க முடியும், பெண்களின் மூளையும், சிந்தனை செய்யும் திறனும் ஆண்களுக்கு இனையானது எனும் எளிய உண்மைகளை தகவல் தொழில்நுட்ப பணிகளில் வேலைபார்க்கும் பெண்கள் உரக்கச் சொல்கிறார்கள். அதைத் தாங்கிக்கொள்ளமுடியாதவர்களின் புலம்பல். முன்னர் அலுவலகங்களில் தட்டச்சு செய்யும் பெண்கள் மற்றும் அலுவலக உதவியாளர்களின் மீது இப்படிப்பட்ட விமர்சனங்கள் வந்ததுண்டு. போலியான சமுதாய மதிப்பீடுகளை முன்வைக்கும் தமிழ் சினிமாக்களில் பல முறை அலுவலக பணிகளில் இருந்த பெண்களை தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தார்கள். இப்போது மாறியிருக்கும் பொருளாதார சூழலில் தக.தொ பணியிலிருக்கும் பெண்களை இவ்வாறு சித்தரிக்கும்படி அந்த அழுக்கு மனப்பாண்மை பரிணமித்திருக்கிறது. பெண்கள் அதிகமாக, ஆண்களுக்கு அதிகமாக சம்பாதிக்கும் துறைகளில் பிரபலமானது தக.தொ துறையே. அதனாலும் அதிகமாக சம்பாதிக்கும் பெண், தனது "திறமையினாலே" சம்பாதிக்கிறார் என்ற விமர்சனம் எழுவது நம் சமூகத்தின் சாபமே. வேலைவாய்ப்பிலும் பெண்களுக்கு சம உரிமை அல்லது முன்னுரிமை கொடுப்பதும் தக.தொ துறையே. இந்த துறைக்கான நேர்காணல்களில் ஆண்களின் மனவோட்டம் எப்படியிருக்கிறது என சோதிக்கும் போது அவர்கள் நிலையாக இந்த நிறுவனத்தில் இருப்பார்களா என்று பார்க்கிறார்கள். அதுவே பெண்கள் அடிக்கடி வேலை மாறுதல் பெருவதில்லை என்பதால் பெரும்பாலான தக.தொ பணிகளுக்கு பெண்களையே தேர்வு செய்கிறார்கள். இதனால் தேராத ஆண்கள் பெண்களின் மீது ஒரு உடலியல் ரீதியான குற்றச்சாட்டை (குனிந்தும் கொஞ்சும் குரலில் பேசியும்) வைப்பார்கள். இதுவும் வாடிக்கையே. பெண்கள் அதிகமாக வேலைசெய்யும் பிற துறைகளான கட்டுமானம், பின்னலாடை, விவசாயம், சில்லரை விற்பனை ஆகிய துறைகளில் அவர்கள் ஆண்களைவிட குறைவான சம்பளமே வாங்குகிறார்கள், அவர்களின் பணியும் குறைவான மதிப்புடைய பணிகளாகவே இருக்கும். இந்த துறைகளில் ஆண்கள் பெண்களை அடக்கியாள்வதாலும், பெண்கள் குறைவாக சம்பாதிப்பதாலும் அவர்களின் மீது இத்தகைய குற்றச்சாட்டுகளும் கீழ்தரமான விமர்சனங்களும் வருவது குறைவு அல்லது அவற்றிர்கு வெளிச்சம் கிடைப்பதில்லை. இங்கு இவர்களுக்கு பிரச்சினையே பெண்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் மற்றும் அவர்களின் உடல் ஆணின் உணர்ச்சிக்கு சொந்தம் என்பது போன்ற ஆணாதிக்க மனப்பாண்மைகளே.

இரண்டாவது, பொதுவாக பிறதுறை சார்ந்தவர்களுக்கு தக.தொ துறையின் பகட்டும், பணமும் கண்களை உருத்துவது. தக.தொ துறையின் வளர்ச்சி பொதுவாக பாரதத்தில் நல்ல சம்பாதிக்கும் வாய்ப்பை மாத சம்பளதார்களுக்கு வழங்கியிருக்கிறது. இந்த வாய்ப்பானது பிற துறைகளைச் சார்ந்த மாத சம்பளதாரர்களுக்கு அல்லது மேசைப்பணியாளர்களுக்கும் கிடைக்கும், ஆனால் அவர்கள் அதற்கு பல்லாண்டுகாலம் உழைக்கவேண்டும். அதேநேரம் தக.தொ பணியில் சேரும் ஒருவர் ஆரம்பத்திலேயே நல்ல சம்பளம் வாங்குவதும் வருடாந்திர ஊதிய உயர்வும் அதிகமாக கிடைப்பதும், பிற துறைகளில் பணிபுரிபவர்கள் பத்தாண்டுகளுக்கு பின் வாங்கும் சம்பளத்தை இவர்கள் பணியில் சேர்ந்த இரண்டு அல்லது மூன்றாண்டுகளில் வாங்கிவிடுவதும் ஒரு மிகப்பெரிய பொருளாதார இடைவெளியை உருவாக்குகிறது. அதோடும் அதிகமாக கைகளில் பணம் புரள்வதும், அவர்களின் ஆடம்பர (சிறுபாண்மையினரே) வாழ்க்கைமுறையும் அவர்களை பொதுவெளியில் தனித்து தெரியும்படி செய்கிறது. இந்த பொருளாதார பிளவும் தக.தொ துறையினரின் மீதான சிலரது வன்மம் வார்த்தைகளாக வருவதற்கும் வாய்ப்பளிக்கிறது. இதிலும் சமூக அடுக்கில் கீழிருக்கும் பெண்களை குறிவைப்பது மிக எளிதானதாகிறது. பிற நாடுகளில் சம்பளம் வாங்குவதில் துறை ரீதியான பிரிவினை குறைவு, ஆனால் நம் நாட்டில் அந்த பிளவு மிகவும் விரிவானது. அதோடு பணத்தின் வாங்கும் தன்மையும், அடிப்படை வசதிகளை பணமே பெற்றுத்தரும் என்ற நிலையும் தற்போதைய நிலையில் அதிகமாக பணம் சம்பாதிக்க உதவும் இந்த துறையை சிலர் ஒருவித கடுப்புடனே பார்ப்பதும் இயல்பே. குறிப்பாக தமிழகத்தின் உயர்ந்துவரும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும், அதிகரித்துவரும் பட்டதாரிகளிடையேயான சம்பள இடைவெளியும் தக.தொ துறையினரின் மீது சிலருக்கு ஒரு இனம்புரியாத வெருப்பை வளர்க்கிறது.

பொதுவாக ஒருவரின் ஒழுக்கம், குறிப்பாக பெண்களின் ஒழுக்கம் என்பதற்கும் ஒரு உயிரின் மதிப்புக்கும் தொடர்பில்லை. ஒரு உயிர் போய்விட்டது. அந்த உயிர் இயற்கையாக மரணிக்காமல் கொல்லப்பட்டிருக்கிறது. அதுவும், ஒரு பெண் என்பதால் ஆண் மனதின் வன்மத்தால் கொல்லப்பட்டிருக்கிறது. நம்மை நாமே சுய விமர்சனம் செய்துகொள்ளவேண்டிய தருணமிது. அதைவிட்டு பெண்களின் ஒழுக்கங் குறித்தான விவாதம் என்பது நம்மீது நாமே சாக்கடை தண்ணீரை தெளித்துக்கொள்வதற்கு சமம். நம் சமூகம் பெண்களுக்கு எவ்வளவு பாதுகாப்பானது, எளியவர் ஒருவர் முன் நமது மனம் எவ்வளவு இறங்குகிறது, வலிமை என்பதை பிறரின் மீது அடக்குமுறை செய்வது என்பதாகவே புரிந்துவைத்திருக்கிறோமா என்பதையெல்லாம் சிந்திக்க வேண்டிய நேரமிது. இனியும் ஒரு பெண் இந்த உலகத்தை இயல்பாக தனது விருப்பத்தின் படி எதிர்கொள்ள தனது ஒழுக்கம் குறித்த சான்றிதழ் பெறவேண்டிய அவசியமற்ற ஒரு சமுதாயம் உருவாக நாம் பாடுபட வேண்டிய நேரமிது.

No comments:

Post a Comment