இந்தியா கடந்த பல ஆண்டுகளாக எந்த போரிலும் ஈடுபடாததால் இராணுவத்தின் மரியாதை குறைந்துவிட்டது. - மத்திய அமைச்சர்
இது உண்மைதான். பொதுவெளியில் இராணுவத்தில் இருப்பவர்களின் மீதான மரியாதையும், இராணுவத்தின் மீதான ஈர்ப்பும் குறைந்துவிட்டது.
நமது இராணுவ வீரர்கள் அமரிக்க, நேட்டோ மற்றும் ருசிய படைகளைப் போல் 1971க்கு பிறகு ஒரு முழு மற்றும் நேரடியான யுத்தத்தில் ஈடுபடவில்லை. அவ்வளவுதான். ஆனால் அவர்கள்தான் உலகிலேயே இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் ஒரு யுத்ததில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அதுதான் தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தம்.
1971 ஆம் ஆண்டு வங்கதேச சுதந்திரப் போரில் கிடைத்த தோல்வி பாகிஸ்தானுக்கு ஒரு முக்கியப் பாடத்தைக் கற்றுக் கொடுத்தது. அது இந்தியாவை நேரடியான ஒரு யுத்ததில் வெல்ல முடியாது என்பது. அந்தப் பாடம் அவர்களை ஒரு புதிய யுத்தமுறையைக் கண்டுபிடிக்கத் தூண்டியது.
1984ல் இந்தியா மீண்டும் பாகிஸ்தானைத் தோற்கடித்தது. இம்முறை ஒரு துப்பாக்கியையும் வெடிக்காமல் ஒரு யுத்தம் நடந்து முடிந்தது. களம் சியாச்சின் பனிப்பரப்பு. 1971 யுத்தத்துக்கு அப்பறம் போடப்பட்ட சிம்லா ஒப்பந்தத்தில் இந்த பனிப்பரப்பின் உரியை யாருக்கென்று தெளிவாக வரையறுக்கப்படவில்லை. எனவே இருதரப்பும் அதை உரிமை கொண்டாடத்துவங்கினர். பாகிஸ்தான் அந்தப் பிரதேசத்தில் இந்தியாவுக்குத் தெரியாமல் படைகளை இறக்கி தனதாக்கிக்கொள்ளலாம் என்று திட்டம் போட்டு அதை அமைதியாக செயல்படுத்த ஆரம்பித்தது. ஆனால் இந்தியாவின் காதுகளுக்கு அந்த செய்தி வந்துவிட்டது. அதிவிரைவாகச் செயல்பட்ட இந்தியா பாகிஸ்தானுக்கு முன்னராக தனது படையணிகளை நகர்த்தி அங்கு நிலைகொண்டுவிட்டது. இப்படித்தான் உலகின் உயரமான யுத்தகளத்தில் இந்தியா ஒரு துப்பாக்கியைக்கூட வெடிக்காமல் எதிரியை out maneuver செய்து வென்றது.
இதற்கிடையே சோவியத் கூட்டமைப்பு ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்தது. முதலில் அங்கொரு கம்யூனிச அரசை நிறுவியது. அடுத்ததாக அந்த கம்யூனிச அரசுக்கு பாதுகாப்பு என்று தனது படைகளை ஆப்கானிஸ்தானுக்குள் அனுப்பியது. இந்த நிகழ்வு இந்தியாவின வடமேற்கு எல்லைப் பகுதியில் ஒரு பெறும் சலணத்தை ஏற்படுத்தியது. இன்றுவரை மத்தியகிழக்கிலிருந்து காஷ்மீர் வரை உலுக்கிக்கொண்டிருக்கும் ஜிகாத் விதைக்கப்பட்டது அப்போதுதான். சார்லி வில்சனின் யுத்தம் (charlie wilsons war) மற்றும் ராம்போ 3 படங்களைப் பார்த்தவர்கள் அந்த ஜிகாதிகளை அமரிக்காவும் பாகிஸ்தானும் எப்படி உருவாக்கி வளர்த்தார்கள் என்பதை ஓரளவு தெரிந்துகொள்ளலாம்.
1989வாக்கில் ஆபகானிஸ்தானை விட்டு சோவியத் ருசியா வெளியேறிய பிறகு வேலையில்லாமல் இருந்த லஷ்கர், ஹர்கத்துல் முஜாகிதீன் போன்ற ஜிகாதி அமைப்புகளுக்கு காஷ்மீரில் தனது நிழல் யுத்தத்தை முன்னெடுக்கும் வேலையைத் தந்தது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ. அதிலிருந்து இன்றுவரை இந்த நிழல் யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சரி இந்த நிழல் யுத்தம் என்ன அவ்வளவு கடுமையானதா?
சர்வ வல்லமை படைத்த இந்திய ராணுவத்தை ஏகே47 துப்பாக்கிகளைத் தாங்கியபடி சல்வார் கமீசை அணிந்துவரும் சில நூறு ஜிகாதிகளால் என்ன செய்துவிடமுடியும்? இந்த சின்ன கொசு பல நோய்களைப் பரப்பி பலநூறு பேரை பலிவாங்குவதுபோல் தான் இந்த பாகிஸ்தான் ஏவிவிடும் பயங்கரவாதமும். இதுவரை 5000-8000 பாதுகாப்புப் படையினர் பலியாகி உள்ளனர். 50,000 குறையாத பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இதுவரை நடந்த நான்கு நேரடி யுத்தங்களிலும் இந்தியா இத்தனை உயிர்களை இழந்ததில்லை. இதுதான் பாகிஸ்தானின் முதல் வெற்றி. இந்தியாவை தொடர்த்து ரத்தம் சிந்தவைப்பது.
காஷ்மீரில் தீவிரவாதமும் ராணுவ நடமாட்டமும் இல்லாமல் இருந்தால் அது ஒரு சுற்றுலாத் தளம். உலகம் முழுவதுமிருந்து கோடிக்கணக்கில் சுற்றுலாப் பயணிகளை கவரவல்ல பூலோக சொர்கம் அது. இந்தியாவின் பணக்கார மாநிலமாகும் தகுதி காஷ்மீருக்கு உண்டு. இந்திய அரசுக்கு பல்லாயிரம் கோடி வருமானம் வந்திருக்கும். ஆனால் இப்போது சுற்றுலா என்பது பெயரளவில் தான் இருக்கிறது. இதனால் இந்திய அரசு காஷ்மீரின் நிர்வாகத்துக்கு பல்லாயிரம் கோடி ஒதுக்கவேண்டிய நிலை. மேலும் பல்லாயிரம் கோடி ரூபாய் பாதுகாப்புக்காக செலவாகிறது. வரவில்லாமல் செலவு மட்டும். இது பாகிஸ்தானுக்கு இரண்டாவது வெற்றி.
அதோடு வேறொரு நுட்பமான நோக்கமும் இருக்கிறது. அது இந்திய ராணுவத்தின் உறுதியை உடைப்பது. தொடர்ந்து ஒரு படைவீரன் களத்தில் முன்னணியில் இருந்தால் அவனது உள்ளம் கலங்கிவிடும். எதிரி யாரென்று புரியாது, எங்கிருந்து வருகிறார்கள் என்று தெரியாது, பார்ப்பவர்களை எல்லாம் சந்தேகப்படவேண்டும், நண்பர்கள் மரணிப்பதை அருகிலிருந்து பார்க்கவேண்டும், திடீர் குண்டுவெடிப்புகள் என ஒரு தொடர் யுத்த சூழலில் வாழவேண்டும். இந்த சூழல் யாருடைய உறுதியையும் குழைத்துவிடும். கண்பறிக்கும் வெண்மை மட்டுமே பரவிய வெள்ளைப் பனிப்பிரிதேசங்களிலும், அடர் வனங்களிலும் தொடர்ந்து ரோந்து சுற்றுவது மனதைப் பேதலித்துவிடும். இத்தகைய சூழலில் தொடர்ந்து இயங்கும் ஒரு படையணி கண்ணாடி போன்ற எளிதில் உடைந்துவிடும் நிலையில் இருக்கும்.
அதுபோன்றே இந்த ஊடுறுவல்கள் ஒரு patternல் வருவதுபோன்ற தோற்றத்தைத் தருவது போல தந்திரமாக செய்வது. வருடத்தின் குறிப்பிட்ட காலங்களிலும் குறிப்பிட்ட இடங்களிலுல் அதிகமாக ஊடுறுவலை நிகழ்த்துவுது. இது பாதுகாப்பைத் திட்டமிடுபவர்களிடம் ஒருவித சலிப்பை ஏற்படுத்தும். இப்படி ஒரு பேட்டர்னை உருவாக்கியாயிற்று, வீரர்களும் சோர்ந்துபோயிருக்கின்றனர், இதுதான் தகுந்த சூழல். இந்த எதிர்பாராத வகைநில் சூழலில் ஒரு திடீர்த் தாக்குதலை நடத்தினால்போதும், அவர்கள் இராணுவம் நமது முன்கள அரண்களைத் தகர்த்துவிட்டு அதிக தூரம் உள்ளே நுழைய முடியும். பிறகு அமைதிப்புறாவைப் பறக்கவிட்டு சரவதேச சமுதாயத்தை பஞ்சாயத்துக்கு அழைத்துக்கொள்ளலாம். கார்கிலில் நடந்தது இதுதான். இதுதான் பாகிஸ்தான் நடத்தும் நிழல் யுத்தத்தின் இலக்கு.
இராணுவ வீரர்கள் என்றாலே உறுதியானவர்களாயிற்றே? ஆமாம். ஆனால் எறும்பு ஊர கல்லும் தேயும்தானே? 2003லிருந்து வருடத்துக்கு சராசரியாக 100க்கும் குறையாமல் ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இத்தகைய தற்கொலைகள் ராணுவத்தின் பலத்தை மெல்ல அரிக்கும் கரையான் போன்றது.
சரி ராணுவம் எப்படி இந்த நிழல் யுத்தத்தை எதிர்கொள்கிறது? படை சுழற்ச்சி மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் வழியாக. அதாவது காஷ்மீரில் எந்தப் படையணியும் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும்தான் பணியில் இருப்பர். பிறகு அவர்களை அங்கிருந்து வெளியே எடுத்துவிட்டு வேறு படையணியினர் அங்கு அமர்த்தப்படுவர். இது படைவீரர்களின் சோர்வைப் போக்குவதோடு எல்லா படையணிகளுக்கும் முன்கள அனுபவத்தை வழங்கும். எதிரியை தடுப்பது, படைவீரர்கள் சோர்வடைவதைத் தடுப்பது, எல்லா படையணிகளுக்கும் யுத்தகள அனுபவத்தை அளிப்பது என ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்துக்கொண்டிருக்கிறது இராணுவம்.
ஆனால் இதிலொரு பிரச்சினை இருக்கிறது. ஒரு படையணி குறிப்பிட்ட காலம் தான் பாதுகாக்கும்/ரோந்து சுற்றும் பிரதேசம் குறித்து கற்கும் அனுபவ அறிவை முழுமையாக அடுத்த படையணியிடம் கையளிக்க முடியாது. இது அடுத்த படையணியை எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்து அறிந்துகொள்ளும் நிலைக்குத் தள்ளிவிடுகிறது. இப்படியான பல சிக்கல்களையும் எதிர்கொண்டுதான் ராணுவம் செயல்பட்டிக்கொண்டிருக்கிறது.
அடுத்தது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது. ராடார்கள், ஆளில்லா விமானங்கள், சிறு ரோபோக்கள், செயற்கைக்கோள் என தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்தி கட்டுப்பாட்டுக் கோட்டை தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பது. அதோடு ஈரான், நேட்டோ, ஆப்கானிஸ்தான், ருசியா, இசுரேல் போன்றவர்களுடன் உளவுத் தகவல்களைப் பரிமாறியும் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே கண்டறிந்தும் தடுத்தும் தாற்காத்துக்கொள்வது.
இப்படியொரு யுத்ததில் ராணுவம் ஈடுபட்டுக்கொண்டிருப்பது மக்களுக்குத் தெரியாதது வெட்கக்கேடு. அதை ஒரு யுத்தமாகவே கருதாத அரசு இன்னொரு வெட்கக்கேடு... என்ன செய்வது? கைபர் கனவாயின் வாயிலில் அன்று மத்திய ஆசிய படைகள் கொட்டிய போர்முரசின் சப்தம் இன்றும் எல்லைகளில் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது... ஆனால் அந்த சப்தம் நமது உறக்கத்தைக் கெடுக்காமல் இருக்க ராணுவம் கண்விழித்துக் கிடக்கிறது. அவர்களுக்குறிய மரியாதையை நாம் வழங்கித்தான் ஆகவேண்டும்.
பின்குறிப்பு : நான் இதில் இந்திய அமைதிப்படை குறித்த தகவல்களைத் தரவில்லை. அது வேறொருநாளில் வேறொரு பதிவில்.