Saturday, 14 May 2022

15MY22-இஜியும்-செவரோடோனட்ஸ்க்-போபாஸ்னா முன்களம்

 இன்றோடு யுத்தம் ஆரம்பித்து 80 நாட்களாகின்றன. இப்போது ரசிய உக்ரைன் போர் முக்கியக்கட்டத்தில் இருக்கிறது. கிழக்கு உக்ரைனில் செவர்ஸ்க்கி-டோனெட்ஸ்க் ஆற்றை ஒட்டி யுத்தம் நடந்து வருகிறது. இந்த ஆறு ரசியாவின் பெல்கோரோட் மாகாணத்தில் உருவாகி உக்ரைனின் கார்கோவ் மாகாணத்தில் கார்கோவ் நகருக்கு கிழக்காக நுழைகிறது. தொடந்ந்து தெற்காகப் பாய்ந்து இஜியும் நகரில் தென்கிழக்காகத் திரும்புகிறது. தொடர்ந்து தென்கிழக்காகப் பாய்ந்து செவரோடோணட்ஸ்க் நகருக்கு வடக்காக ரூபிஸ்னே நகருக்கு அடுத்து தெற்காகத் திரும்பி மீண்டும் செவரோடோனட்ஸ்க் நகரைத் தாண்டி தென்கிழக்காகத் திரும்புகிறது. இதில் கிழக்கு மற்றும் வடக்குக் கரைகளில் ரசியப் படைகளும் தெற்கு மற்றும் மேற்குக் கரைகளில் உக்ரைனியப்படைகளும் உள்ளனர். 

 

முதல் படம்: கிழக்கு உக்ரைனின் வடக்கு வடகிழக்கு முன்களம்.

இந்த ஆற்றைக் கடந்து உக்ரைனிய நிலைகளைப் பிடிக்கும் யுத்தத்தை ரசியா நடத்தி வருகிறது. இந்த ஆற்றைக் கடந்தால்தான் ரசியர்களால் லூகாங்ஸ்க் மற்றும் டோணட்ஸ்க் மாகாணங்களைத் தங்களது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரமுடியும். 

இரண்டாம் படம்: செவர்ஸ்க்கி டோனட்ஸ் ஆறு.

 

இந்த யுத்தகளத்தின் முக்கிய சண்டை இஜியும் நகரைப் பிடிக்க நடத்தப்பட்டது. இந்த நகரம் கிழக்கு உக்ரைனின் குறிப்பாக லூகாங்ஸ்க் மற்றும் டோனட்ஸ்க் மாகாணங்களைப் பிடிப்பதற்கு வியூக முக்கியத்துவம் வாய்ந்த நகரம் இது. இந்த நகருக்குள்ளாகப் பாயும் செவரோடோனட்ஸ்க் ஆற்றின் மேலே பாலங்கள் இருக்கின்றன. வடக்கே கார்கோவ் நகரை முற்றுகையிட்ட ரசியர்கள், அங்கு ஒரு முக்கிய உக்ரைனியப் படையைத் தடுத்து வைத்திருந்தனர், இதோடு செவரோடோணட்ஸ்க் நகரையும் முற்றுகையிட்டிருக்கிறது ரசியப்படை. இப்படி முற்றுகைகளைத் தொடர்ந்துகொண்டே கீவ் மற்றும் சுமி மாகாணங்களிலிருந்த படைகளைத் திரும்பப்பெற்று அவர்களை லூகாங்ஸ்க் மாகாணத்திற்குள் அனுப்பி வந்தனர். புதிதாக லூகாங்ஸ்க் மாகாணத்திற்கும் வந்த படைகள் நேராக இஜியும் நகரை முற்றுகையிட்டு பிடித்தும் விட்டனர். இங்கிருந்து மேற்கு மற்றும் தெற்காகத் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே கார்கோவ் நகரைச் சுற்றி முற்றுகையிட்டிருந்த படைகளை விலக்கிக்கொள்ளத் துவங்கினர். இந்த நகர்வுகள் வழியாக இஜியும் நகரை உக்ரைனியத் தாக்குதலிலிருந்து தற்காத்துக்கொண்டே உக்ரைனிய முன்களத்தை சிதறச் செய்துவருகின்றனர். 

 

மூன்றாம் படம்: இஜியும் முனை.

 

இஜியும் நகருக்கு கிழக்காக முன்னறிய ரசியப் படைகள் ஓஸ்கில் அணைக்கட்டில் வைத்து ஒரு உக்ரைனியப் படையைணியைச் சுற்றிவளைத்து வைத்துள்ளனர். இன்னும் கிழக்காக பல இடங்களில் செவர்ஸ்க்கி ஆற்றைக் கடக்க தற்காலிகப் பாலங்களை அமைத்து கடக்கு முயற்சிகள் நடந்து வருகின்றன. இதில் ஒரு தற்காலிகப் பாலத்தை ஒட்டி உக்ரைனியர்களின் பீரங்கித் தாக்குதலில் பல ரசிய கவச வாகனங்கள் அழிக்கப்பட்ட செய்திகள் வந்தன. அந்த கடக்கும் பகுதியை உக்ரைனியர்களும் பின்வாங்கும் போது பயன்படுத்தியதும் அதை ரசியர்கள் தாக்கி உக்ரைனியர்களின் வாகனங்களை அழித்ததும் படங்களை ஆராய்ந்து பார்த்து வல்லுநர்கள் உறுதிப்படுத்திவருகின்றனர்.

 

இந்த கடக்கும் முயற்சி வெற்றியடைந்தால் ரசியர்களால் செவரோடோனட்ஸ்க் நகருக்கு வரும் உக்ரைனியப் படைகளின் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்தி அந்த நகரத்தை சுற்றிவளைக்க முடியும். அந்த நகரின் வடக்காக ரூபிஸ்னே நகரம் முற்றாகப் பிடிக்கப்பட்டுள்ளது. நமது பவானி குமாரபாளையம் நகரங்களைப் போல ஒரு சிறு ஆற்றின் இருகரைகளில் அமைந்திருக்கும் நகரங்கள் இவை. ரூபிஸ்னே நகரிலிருந்து பின்வாங்கிய உக்ரைனியர்கள் அந்த ஆற்றின் மேலிருக்கும் பாலங்களைத் தகர்த்துவிட்டிருக்கின்றனர். இப்போதைக்கு செவரோடோனட்ஸ்க் நகரம் உக்ரைனோடு செவர்ஸ்க்கி ஆற்றின் மேலிருக்கும் ஒரே பாலத்தின் வழியேதான் இணைக்கப்பட்டுள்ளது. அந்த நகரை ஒட்டி அமைந்துள்ள மேலும் இரு பாலங்கள் ரசியர்களின் பீரங்கிகளின் வீச்சு வரம்புக்குள் இருப்பதால் அந்த வழியாகப் போக்குவரத்துக்கு வாய்ப்பில்லை.

 

செவரோடோனட்ஸ்க் நகருக்கு தெற்காக முன்களத்தில் அமைந்திருக்கும் போபாஸ்னா நகரம் ரசியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்த நகரம் சுற்றியிருக்கும் பகுதிகளிலிருந்து உயரமாக அமைந்திருப்பதால் இந்த நகரிலிருந்து ரசிய பீரங்கிகளால் துள்ளியமாக் குறிவைக்கமுடியும். அதோடு இந்நகருக்கு வடக்காகத் தான் செவரோடோனட்ஸ்க் நகருக்கான முக்கிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. செவரோடோனட்ஸ்க் நகரைப் பிடிப்பதற்காக ரசியர்கள் சுற்றிவளைத்து தாக்கி வருவது தெளிவாகத் தெரிகிறது. 

 

நான்காம் படம் செவரோடோனட்ஸ்க் முனை.

இதே போன்ற முன்னகர்வுகளால் தான் சோவியத் படைகள் இந்த பகுதியிலிருந்து நாஜிப்படைகளைத் தோற்கடித்தது. இந்த செவர்ஸ்கி டோனட்ஸ் ஆறு இயற்கையான அரண். இஜியும் நகரைத்தான் தனது ஆற்றைக் கடக்கும் முனையாக் கொண்டு கார்கோவ் நகரைப் பிடிப்பதற்கான யுத்தங்களை சோவியத் நடத்தியது. வரலாறு 80 ஆண்டுகள் கழித்து திரும்புவது ஆச்சர்யப்படுத்துகிறது!

 செவர்ஸ்கி ஆற்றைக் கடக்க முயன்று எதிரிகளின் பீரங்கிகளுக்குப் பழியான இரு தரப்புகளின் கவசவாகனங்களின் படம் ஐந்தாம் கமெண்டில்.

 

ஐந்தாம் படம்: முறியடிக்கப்பட்ட ஆற்றைக் கடக்கும் முயற்சி. அழிக்கப்பட்ட கவச வாகனங்கள்.

பீரங்கித்தாக்குதலிலிருந்து தங்களது தகரிகளைப் (டாங்கிகளுக்கு ஈழத்தமிழர்கள் வைத்த பெயராம்) பாதுகாக்க ஆற்றில் இறக்கி மறைத்து வைத்திருக்கும் ரசியர்கள். தகரிகளின் உட்புறம் நீர் புகா வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. உள்ளெரியுந்துக்கான (எஞ்சின்) காற்றோட்டத்துக்கு நீரடிக் காற்றுவழங்கி அமைப்புகள் (Snorkel) இருக்கின்றனவாம். அந்தத் தகரிகளின் குண்டுவீச்சுக் குழாய்கள் தண்ணீருக்கு வெளியே துருத்திக்கொண்டிருப்பதைப் படத்தில் பார்க்கலாம். 

  

ஆறாம் படம்: மறைவாக இருப்பதற்காக ஆற்றில் இறக்கப்பட்டிருக்கும் தகரிகள் (டாங்கிகள்). மேலே தூக்கப்பட்டிருக்கும் குண்டுவீச்சுக் குழாய்கள்.

தெற்காக ஒடஸ்ஸாவின் கரையில் அமைந்திருக்கும் பாம்புத் தீவைப் பிடிக்க உக்ரைனியர்கள் முயன்றதும் அந்த முயற்சியில் ரசியர்களின் நிலைகளின் மீது தாக்குதல் நடத்தி சில விமான எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் கட்டிடங்களை ஆளில்லா விமானங்களையும் போர் விமானங்களையும் வைத்தும் தாக்கியதும் மே மாத்தின் முதல் வாரத்தில் நடந்தது. மே 9 வெற்றி நாளன்று ரசியர்களுக்கு ஒரு அதிர்ச்சியைத் தருவதற்காக இந்த தாக்குதலை பிரிட்டன் வல்லுநர்களின் வழிகாட்டுதலில் உக்ரைனியர்கள் நடத்தியதாகத் தெரியவருகிறது. உக்ரைனியர்கள் தாக்குதலை அதிகரித்ததும் அங்கிருந்து பின்வாங்குவது போல நடித்து உக்ரைனியப் படைகளை வரவைத்து தாக்கி அழித்துள்ளனர். ரசியர்களின் நிலைகளைத் தாக்கிய வீடியோக்களை மே முதல் வாரம் முழுவதும் தொடர்ந்து வெளியிட்டு வந்தனர். அப்போது அமைதியாக உக்ரைனியர்களின் ஆளில்லா விமானங்களையும் விமானங்களையும் அழித்ததாக அறிக்கைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தனர். இப்போது அந்தத் தீவு ரசியர்களின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிறது என்பது உறுதியாகியிருக்கிறது. இந்தத்தீவை மே 9க்குள் பிடிக்கவேண்டும் என்ற முட்டாள்தனமான முயற்சிக்கு பல உக்ரைனியர்கள் உயிரிழந்திருப்பது இப்போது தெரியவருகிறது. பிரிட்டன் இராணுவ வல்லுநர்களின் அறிவுரையை அப்படியே செயல்படுத்த உத்தரவிட்டது ஜெலன்ஸ்க்கியாம்.

Sunday, 30 August 2015

Helmet

Why are helmets inevitable? As per the World Health Organization studies on road safeties the following are key stats or facts,

>About 1.24 million people die each year as a result of road traffic crashes.
>Road traffic injuries are the leading cause of death among young people, aged 15–29 years. 91% of the world's fatalities on the roads occur in low-income and middle-income countries, even though these countries have approximately half of the world's vehicles.
>Half of those dying on the world’s roads are “vulnerable road users”: pedestrians, *cyclists* and *motorcyclists*.
>Without action, road traffic crashes are predicted to result in the deaths of around 1.9 million people annually by 2020.
>Only 28 countries, representing 416 million people (7% of the world’s population), have adequate laws that address all five risk factors (speed, drink-driving, *helmets*, seat-belts and child restraints).

Why does wearing helmets while riding motorcycle a must, if we want to increase the probability of us surviving a motorcycle ride,

Motorcycle helmets

*Wearing a motorcycle helmet correctly can reduce the risk of death by almost 40% and the risk of severe injury by over 70%.*

*When motorcycle helmet laws are enforced effectively, helmet wearing rates can increase to over 90%*

*Requiring helmets to meet a recognized safety standards is important to ensure that helmets can effectively reduce the impact of a collision to the head in the event of a crash.*

http://www.who.int/mediacentre/factsheets/fs358/en/

ஹெல்மெட்

ஹெல்மெட்!

மாநகரத்திலிருந்து வெளியேறும் நான்குவழிப்பாதை. நகரத்தின் நெரிசல்கள் குறைந்து வெறும் சாலையாக இருந்தது. அவன் தனது இரு சக்கர வாகனத்தின் வேகத்தைக் கூட்டினான். வண்டி எழுபது கிமீ வேகத்தை அடைந்தது. அந்த காவல்துறை சோதனைச் சாவடியைத் தாண்டி இடதுபக்கமாக ஒரு சாலை வந்து இணைகிறது. இரண்டுமுறை ஒலியெழுப்பிவிட்டு வண்டியின் வேகத்தை அறுபதாகக் குறைத்தான். அந்த சாலையிலிருந்து கிளம்பிய ஒரு ஒளிப்பொட்டு திடீரென இவனது வழியில் குறுக்காக வந்துவிட்டது. தனது வண்டியின் விசையைக் குறைத்தபடியே இடது பக்கமாக வண்டியை சாய்த்து ஒதுங்கியபடியே அந்த வெளிச்சப் புள்ளியைத் தாங்கிய வண்டியை கடக்க முயல்கிறான். அந்த இடைச்சொருகிய வண்டி பதட்டத்தில் நின்றுவிட இவன் கணக்குப்போட்டபடி இடிபடாமல் தாண்ட முடியவில்லை. இவன் வண்டியின் பின்பக்க இன்டிகேட்டர் அந்த வண்டியில் மோதியது.

அவனது வண்டியை பார்க்க அடுத்தநாள் காவல்துறை சாவடிக்குப் போயிருந்தபோது அந்த காவலர் அதற்குப்பிறகு நடந்ததைச் சொன்னார் இவன் வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டு சாலையில் உருண்டதாகவும், வண்டி கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்று கரணமடித்து விழுந்ததாகவும் சொன்னார். அதில் ஒரு கரணம் இவனது முதுகைக் களமாக்கியது அவன் முதுகில் உள்ளங்கையளவு இருந்த இரண்டு தீக்காயங்களைப் பார்த்தபோது தெரிந்தது.

நல்ல வாட்டசாட்டமான இருபது வயது இளைஞன். களையான முகம். அவனது சிகையமைப்பும் முகமும் அவனைப் பார்ப்பவர்களுக்கு திரைப்பட நடிகர் ஆர்யாவை நியாபகப்படுத்தும். அந்த விபத்து நடந்து இரண்டாவது மணிநேரத்தில் மருத்துவமனையில் அவனைப் பார்த்தேன். என் கண்களில் என்னையறியாமல் கண்ணீர் வந்தது. நெற்றியில் ஒரு அங்குல அளவுக்கு கிழிந்திருந்தது, வலது புருவத்துக்குப் பக்கவாட்டில் ஆரம்பித்து கண்ணத்தில் தடம்பதித்த இன்னொரு கிழிசல், மேல் பற்கள் இரண்டைக் காணவில்லை, இன்னொன்று மேலே எழும்பில் ஏறியிருந்தது, அவனது உதடுகள் கிழிந்து வீங்கியிருந்தன, அவனது வலது காதுக்குப் பின்புறம் சாலைநில் உராய்ந்ததால் பலத்த காயம்.

முதுகில் பட்ட தீக்காயங்கள் மெதுவாக ஆறிவிட்டன. அவன் பற்களுக்கு பொய்ப்பல் கட்டிவிட்டார்கள். முகத்தில் பட்ட காயங்கள் ஆறவும் தையல்களைப் பிரிக்கவும் நான்கு மாதங்களாகிவிட்டன. காதுகளுக்குப் பின்புறம் உராய்வினால் தீய்ந்துபோன சதைகள் தழும்பாகிவிட்டன. அவை புற்றுநோய் தாக்கிய சதைகள் போல தொடர்ந்து வளர்ந்து ஒருகட்டத்தில் காது பந்துபோலாகிவிட்டது. அதற்கு பிலாஸ்டிக் சர்ஜரி செய்து காதைக் காப்பாற்றிக்கொண்டான்.

முகத்திலிருக்கும் தழும்புகள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. அவற்றை அகற்ற அறுவை சிகிச்சை செய்துகொள் என்றபோது மறுத்துவிட்டான். தான் அன்று செய்த தவறுகளை நினைவில் வைத்துக்கொள்ள அந்த தழும்புகள் அவசியமென்றான்.

அவன் அன்று செய்த தவறுகளில் எனக்குத் தவறாகத் தெரிந்தது ஒன்றுதான். அவன் ஹெல்மெட் அணியாவில்லை. அந்த சாவடியில் அன்று பணியிலிருந்த காவலரும், அவன் விழுந்தபோது அவனை ஓடிச்சென்று தூக்கிய ஒரு வாயில் காவலரும், அவனுக்குச் சிகிச்சையளித்த மருத்துவரும்  சொன்னது இதுதான், "ஹெல்மெட் போட்டிருந்தா அவன் முகம் தப்பியிருக்கும்". அவன் புது வாகனம் வாங்கியதாகச் சொன்னபோது நான் அவனிடம் சொன்னது ஒன்றேதான், ஹெல்மெட் வாங்கியாச்சா? அப்பறம் வாங்கிக்கலாம் என்றான். ஆயிரத்தைனூறு பெறுமதியுள்ள அந்த ஹெல்மெட்டை வாங்கும் முன் அவனது முகத்துக்கு மட்டும் ஒரு லட்சம் செலவாகியிருந்தது...

இது கதையல்ல நிஜம்... நீதிமன்றம் உத்தரவிடும் வரையிலோ, அரசு சொல்லும் வரையிலோ, காவலர்கள் உரிமத்தை ரத்துசெய்யும் வரையிலோ காத்திருக்காதீர்கள். உடனே ஒரு ஹெல்மெட் வாங்கிவிடுங்கள்.

நானும் காதலும்

நானும் காதலும்!!!

அந்த பொண்ணு!!! அவ்ளோ அழகு... ஒரு வெள்ளிக்கிழமை அவங்க சரவணம்பட்டி பஸ் ஸ்டாப்ல நின்னுட்டு இருந்தாங்க. அவங்க புளியம்பட்டி. நான் சத்தி. அன்னைக்குத்தான் அவங்கள மொதவாட்டி பார்த்தேன். அப்பப்பா!!!

கூட என்னோட நண்பன். மைசூர் போற கர்நாடக அரசு சொகுசுப் பேருந்து வந்தது. அந்த வண்டியில முன்னாடி மட்டும்தான் கதவு. வண்டி வந்தவுடனே ஒரு ஆறேழு பேர் முந்தியடிச்சு ஏறிட்டாங்க. இப்போ நான், என் நண்பன் மற்றும் அவள். அந்த பொண்ணு ஏற முற்படும்போது இவன் தன்னோட பெரீஇஇய டிராவல் பேக குறுக்க நீட்டி அந்த இடைவெளியில ஏறிட்டான். அவங்களும் அடுத்து நான் என்ன செய்யப்போறேன்னு என்ன பார்த்தா. நாமதான் இந்தக் கதையில நாயகனாச்சே!! "நீங்க ஏறுங்க"னு சொல்லிட்டு வழிவிட்டு நின்னேன். அந்தப் பொண்ணும் நன்றிங்கனு சொல்லிட்டு ஒரு புன்முறுவல உதிர்ந்துட்டு ஏறிட்டா. உள்ள ஏற்கனவே நல்ல கூட்டம். வண்டியோட எஞ்சின் கூட்டுக்கு மேல அந்தப் பொண்ணு உக்காரவும், சரி உள்ள இடிபாட்டுக்குள்ள போகவேண்டாம், இப்படியே படியில நின்னபடியே இவங்கள சைட் அடிப்போம்னு நான் அங்கேயே நின்னுட்டேன்.

இப்போ என்னோட நண்பன் வந்தான். அந்த பொண்ணு முன்னாடி தான் சாதிச்சதாக் காட்ட அவன் எழுதுன ஏதோவொரு மென்பொருளப் பத்தி என்கிட்ட அளந்தான். நாமதான் இயந்திரவியலாச்சே! ஒன்னும் புரியல. அவன அப்படியே கலாய்ச்சு அனுப்பிடலாம்னு நான் ஓட்ட ஆரம்பிச்சுட்டேன்.இவனுக்கு அது புரியல, தொடர்ந்து தொனதொனனு பேசிட்டே இருக்கவும் நான் ஓட்டவும் அந்த பொண்ணுக்கு சிரிப்பு வந்துடுச்சு. அப்பாடா சிரிக்க வச்சுட்டோமே!!! இப்படியே இவன வச்சே இன்னைக்கு அந்த பொண்ணுகிட்ட பேசிடனும்னு, "அப்பறம், மச்சி நீ காலையில சாப்பிட்ட இட்லிய பத்தியும் சொல்லேன்! எங்களுக்குப் பொழுது போகனுமே"னு சொன்னதும் அந்தப் பொண்ணு சிரிக்கவும் பையனுக்கு தன்னதான் ஓட்டுறாங்கனு புரிஞ்சுடுச்சு. உடனே என்ன முறைச்சுட்டு நான் உள்ள போறேன்னு போயிட்டான்.

நானும் அதான் சந்தர்பம்னு அவங்ககிட்ட "என்னங்க மழையடிச்சு ஓஞ்ச மாதிரி இருக்கா"னு கேட்டேன். அவ "ஆமாங்க. அவரு உங்க நண்பரா", நான், "ஆமாங்க. நல்ல பையன்தான், ஆனா என்ன செய்ய அடிக்கடி இப்படி காதுல ரத்தம் வர வச்சுடுவான். இப்படி அவன ஓட்டியே நாங்களும் பொழுதப் போக்கிடுவோம். உங்களுக்கு பொழுதுபோகனும்னா சொல்லுங்க அவன மறுபடியும் தூண்டிவிட்டா போதும்!". அவ "ஹஹஹா. பாவமுங்க விட்டுடுங்க!" நான் "ம்ம்ம், எனக்கு போரடிக்கும். பரவாயில்லை, அப்ப நாம பேசலாமா?? " அவ (சிரிது வெட்கத்துடன், "நல்லா பேசுறீங்க!!" "நான் நிரஞ், நீங்க!" அப்படியே அன்னூர் வரைக்கும் அறிமுகப்படலம் ஓடுச்சு..

அன்னூர்ல நிறைய பேர் இறங்கிட்டாங்க. உள்ள கொஞ்சம் இருக்கைகளே காலியாச்சு. அவன் "டேய் இருக்கை காலியாயிருக்கு. வாடா"னு என்னக் கூப்பிட்டான், நான் அவங்களப் பாத்தபடியே, "இல்லடா எனக்கு இங்கதான் சவுகரியமா இருக்கு"னேன். அவ மறுபடியும் வெட்கப் புன்னகை ஒன்ன உதிர்க்க, அப்பாடா இன்னைக்கு நமக்கு ஒன்பது கிரகமும் உச்சத்துல இருக்கும்போலனு மறுபடியும் கடலை போட ஆரம்பிச்சுட்டேன். கொஞ்ச நேரம் கூட அவனுக்குப் பொறுக்கல,  ஏதோ சொல்லிக்கிட்டே மறுபடியும் வந்தான், அவ என்னப் பார்க்க, நான் வெளிய எட்டிப் பார்த்துட்டு, "மறுபடியும் மழை வரும்போலயே"னு சொல்லவும், அவ கலகலனு சிரிக்கவும், அவனுக்கு புரிஞ்சுடுச்சு நான் அவனத்தான் ஓட்டுறேன்னு. மறுபடியும் கோவிச்சுட்டுப் போயிட்டான். அப்பறம் அவ புளியம்பட்டியில இறங்கற வரைக்கும் பேசிட்டு இருந்தோம்,

அடுத்த வாரம் மொத நாலு நாளும் ஒரே பேருந்துலதான் போனோம்... தினமும் பேசிட்டே போய் ஒரு அன்டர்ஸ்டாண்டிங் வந்துடுச்சு... அந்த வெள்ளிக்கிழமை எனக்கு கொஞ்சம் வேலை இருந்ததால நான் அவள மறந்துட்டேன். என்கூட வேலை செய்யுற பையன் பஸ் ஸ்டாப்ல இருந்து போன் பண்ணான் "பார்ட்னர், அவங்க உங்களுக்காக வெய்ட் பண்றாங்க. ரெண்டு பாயிண்ட் டூ பாயிண்ட் வந்தும் அவங்க ஏறல. என்ன பாத்ததும் என்ன சுத்தி நீங்க இருக்கீங்களானு பாத்தாங்க. சீக்கிரம் வாங்கனான்"

நானும் உடனே அடுத்த அஞ்சாவது நிமிசத்துல இன்னொருத்தன பஸ் ஸ்டாப்ல டிராப் பண்ண சொல்லி போயிட்டேன்... அவங்க எனக்கு தெரியாம என்ன பாத்தாங்க. அப்பறம் என்ன நினைச்சாங்கனு தெரியல அண்ணூர் போற டவுன் பஸ் ஒன்னு வந்துச்சா, அதுல ஏறிட்டாங்க...

அவங்க நடை ஒரு தினுசா அழகா இருக்கும். அவங்க பஸ்ல ஏறும்போதுதான் பாத்தேன்... என்னடா எங்கேயோ பாத்த உருவமா இருக்கே? அவங்க புளியம்பட்டிக்கு தான போகனும்? எதுக்கு அண்ணூர் போறாங்க? அதுவும் டவுன் பஸ்லனு எனக்கு யோசனை

அப்பத்தான் பாத்தேன் உள்ள இருந்து அவங்க என்ன பாத்தத.. நான் பாத்த உடனே திரும்பிக்கிட்டா..  ஓ... நம்மகிட்ட விளையாடுறாங்க!!" அதையும் பாப்போமேனு அங்கேயே நின்னுட்டேன்...

அப்ப மணி ஆறு முப்பது... 6.35, 6.40, 6.45 பாயின்ட் டூ பாயின்ட் எல்லாம் விட்டுட்டு 6.55 பஸ்ல ஏறுனேன். அந்த பஸ் அண்ணூர் பஸ் ஸ்டாண்டுக்குள்ள நுழையும்போதே ரன்னிங்ல இறங்கிட்டேன்... அப்பறம் பஸ் வெளிய வரும்போது முன்னாட ஏறி படியில நின்னுட்டேன்.

பஸ் புளியம்பட்டியில போய் நின்னதும் இறங்கி படிக்குப் பக்கத்துல நின்னுட்டேன். நாலு பேர் இறங்குனாங்க... அஞ்சாவதா அவங்க இறங்குனாங்க!!!!

அவங்க என்னப் பாக்க, நான் அவங்களப்பாக்க!!! அவங்க கண்ல அவ்ளோ வியப்பு!!! அப்படியே வெக்கமா ஒரு சிரிப்பு!!! அம்மம்மா!!!

இறங்கி என்னப் பாத்து நின்னாங்க... ஹாய்னு சொன்னேன்!!! ஹாய்னு சொல்லிட்டு வெக்கப் பட்டுட்டே ஓடிட்டாங்க... அவங்க அப்பா அங்க இருந்தாரா நான் சரி திங்கள் கிழமை பாத்துக்கலாம்னு விட்டுட்டேன்...

ஆனா ஞாயிற்றுக் கிழமை மேலாளர் கூப்பிட்டு திங்கள் மதியமா அலுவலகம் வா... திங்கள்ல இருந்து நீ second shiftனு சொன்னாரா... அப்பறம் அவங்கள பாக்கவே முடியல... அவங்க மேல காதல் இருக்குற மாதிரி எனக்கு தெரியலயா, சரி மறுபடியும் விதி இருந்தா அவங்கள பாக்கலாம்னு விட்டுட்டேன்..  விதி இல்லையா இல்ல எனக்கு வேலை முக்கியமாப்போச்சானு தெரியல.. அப்பறம் அவங்களப் பாக்கவே இல்ல...

இப்படி இங்க ஒன்னு அங்க ஒன்னுனு காதலா இல்ல வயசுக்கோளாரானு தெரியாமையே பரவசப்படுத்திட்டு போன நினைவுகள் ஏராளம்!!!

வறுமைக்கோட்டைக் கடக்கும் வழி

வறுமைக்கோட்டைக் கடக்கும் வழி.

நாட்டில் இன்னமும் முப்பதுகோடிப்பேராவது இன்னமும் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கின்றனர். அதாவது இருபது சதவீதம் மக்கள். உலகில் வறுமையில் இருக்கும் மக்களில் கணிசமானவர்கள் இந்தியாவில் வசிக்கிறார்கள். அரசும் தன்னாலியன்ற மாணியங்களையும் இலவசங்களையும் தந்து இந்த வறுமைக்கோட்டுக்குக் கீழிருப்பவர்கள் பசியில் வாடாமல் பார்த்துக்கொள்ள முயல்கிறது.

ஆனால் பொருளை இலவசமாகத் தந்தால் அது விரையம்தான். கல்வியை இலவசமாகத் தந்தால் நிச்சயமாக அது பலரையும் அந்த நிலையிலிருந்து மேலே பொண்டுவரும். ஆனால் கல்வி இலவசமாக இருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டுமே? அதற்குத்தான் சத்துணவுத் திட்டங்களைக் கொண்டு வந்தனர். அப்படி கல்வியை சத்துணவோடு உட்கொண்ட பலர் அந்த வறுமைக்கோட்டைத் தாண்டும் வல்லமையைப் பெற்றனர். இத்தனை செய்தும் இன்னும் பலர் வறுமைக்கோட்டுக்குக் கீழிருப்பது எதனால்?

உழைக்கும் எண்ணம் இல்லாமை, பிச்சை புகினும் கற்கை நன்றே என்று கல்வியின் அவசியத்தை உணராமை, அரிசி இலவசமாகக் கிடைக்கிறது, பருப்பெல்லாம் ரொம்பக் கம்மியா கிடைக்குது அதனால நான் சம்பாதிக்கிறதக் கொண்டு தினமும் குடிப்பேன் அல்லது ஊதாரித்தனம் செய்வேன் என்று இன்றைய உழைப்பில் வரும் பணத்தை சேமிக்காமல் வீணாக்குவது ஆகியனதான் முக்கியக் காரணம்.

உழைக்கும் எண்ணமே யாரையும் முன்னேற்றும். அடுத்தது கல்வி. தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தன் குழந்தைகளுக்கு எப்படியாவது கல்வியை வழங்கியே ஆகவேண்டும் என்று நினைக்கும் ஒரு குடும்பம் தனது இரண்டாம் தலைமுறையில் தானிருக்கும் நிலையிலிருந்து அடுத்த கட்டத்துக்கு நிச்சயம் முன்னேறியிருக்கும்.

என் குடும்பத்தையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். என் தாத்தாவுக்கு சொத்து எதுவும் பாத்தியப்படவில்லை. அவர் தனது அண்ணன் குத்தகைக்கு ஓட்டிய நிலத்தில் கூலிக்கு வேலை செய்தார். என் பாட்டி தினமும் பால் வாங்கி அதை தயிராகவும் மோராகவும் மாற்றி  இருபது லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய பானைகள் இரண்டை தலையில் தூக்கி நடந்து சென்று விற்று சம்பாதித்திருக்கிறார். அவர்கள் கஷ்டப்பட்டாலும் அப்பாவையும் அத்தையையும் படிக்க வைத்தார்கள். அறுபதுகளிலேயே அவர்களை பியுசி வரை படிக்க வைத்தனர். இது அப்பாவை திருப்பூருக்கு குடிபெயரவும் மில்களில் வேலை செய்யவும் வாய்ப்பளித்தது. தாத்தாவும் தான் சேமித்த பணத்தில் ஒரு நிலத்தைக் குத்தகைக்குப் பிடித்து கூலி என்கிற வருவாய் நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு முன்னேறினார்.  அப்படியே மேலும் தான் சேமித்த பணத்திலும் தன் மகன்கள் சம்பாதித்த பணத்திலும் ஒரு விவசாய நிலத்தை விலைக்கு வாங்கி அடுத்த கட்டத்துக்கு தன் குடும்பத்தை நகர்த்தினார்.

அப்பாவுக்கும் படிப்பு ஒரு புது உலகத்தை திறந்தது. அவரும் மில் வேலையிலிருந்து ஒரு பனியன் கம்பனி துவங்குமளவு முன்னேறினார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்களைத் தாங்கிக்கொண்டே என்னையும் அக்காவையும் பட்டதாரி ஆக்கிவிட்டார்கள். இப்போது தொழிலை விட்டுவிட்டாலும் அவர் விவசாயியாக நாளைக்கு பன்னிரண்டு மணிநேரத்துக்கு மேல் உழைத்துக்கொண்டிருக்கிறார்.

இந்த கல்வி, உழைப்பு மற்றும் சேமிப்பு. இதன் அவசியத்தை உணர்ந்தால் ஒரு தலைமுறை போதும். வறுமைக்கோடு என்பதெல்லாம் குறைந்த காலத்துக்கு இருக்கும் தற்காலிக நிலைதான்.

எத்தனையோ பேர் இந்த முப்பதாண்டுகளில் வறுமைக் கோட்டைத்தாண்டி வெளியேறியிருக்கிறார்கள். வறுமைக்கோட்டுக்குக் கீழிருப்பவர்களின் எண்ணிக்கை 1990களில் 35%லிருந்து இன்று 21%மாகக் குறைந்திருக்கிறது. அரசு பல மாணியங்களை வழங்குகிறது. அவற்றுக்கு பொருளாதார ரீதியிலான பயணர்களைக் கண்டடையவேண்டும். இது தேவையற்ற பொருளாதார விரையத்தைக் குறைக்கும். கல்வியை இலவசமாகவும் கட்டாயமாகவும் ஆக்கிடவேண்டும். இது மேலும் பலரை வளர்ச்சி நீரோட்டத்தில் இணைத்திடும். அடுத்த பத்து வருடங்களில் பதினாலு வயது பூர்த்தியடைந்தவர்களில் அடிப்படைக் கல்வியின் பரவல் நூறு சதவீதம் என்று இலக்கு வைத்து செயல்படவேண்டும். அதுதான் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு அச்சாணியாக இருக்கும். எல்லோருக்கும் உழைக்கும் எண்ணம் வந்துவிட்டாலே வறுமை என்பதெல்லாம் பழங்கதையாகிவிடும்.

சென்னை மெட்ரோவும் அதன் கட்டமைப்பு அரசியலும்

சென்னை மெட்ரோ ரயிலும் அதன் கட்டமைப்பு அரசியலும்.

நாங்கதான் அத கட்டிமுடிச்சோம், நாங்க மாநிலத்துல ஆட்சியிலிருக்கும் போதுதான் அந்த திட்டத்தைக் கொண்டுவந்தோம், நாங்க மத்தியில ஆட்சியில இருக்கும்போதுதான் அந்த திட்டத்துக்கு அனுமதி தந்து நிதி ஒதுக்குனோம், இப்ப நாங்க மத்தியில ஆட்சியில இருக்கும்போதுதான் அந்த திட்டம் நடைமுறைக்கு வருது

அதனால அந்தத் திட்டம் எங்களுக்குத்தான் சொந்தம்!!!

சரி இப்ப யார் என்ன செஞ்சாங்கனு பார்ப்போம்.

மொத்த திட்டத்தின் மதிப்பில்,
மத்திய அரசின் நேரடி முதலீடு - 15%
மத்திய அரசு கடனாக வழங்குவது - 5%
மாநில அரசின் நேரடி முதலீடு - 16%
மாநில அரது கடனாக வழங்குவது - 5%
ஜப்பான் சர்வதேச கூட்டுறங்வு வங்கி கடனாக- 59%.

ஆக மொத்த செலவில்,
மத்திய அரசின் பங்கு - 20%
மாநில அரசின் பங்கு - 21%
ஜ.ச.கூ வங்கியின் பங்கு - 59%

சரி. மத்திய அரசுக்கு இந்தப்பணம் மரத்துல காய்ச்சுதா?

2013-14 நிதியாண்டுல தமிழகத்துல இருந்து வசூலான வருமான வரி ₹42,524 கோடி. இப்ப இந்த திட்டத்துக்கு இதுவரை ஒதுக்கப்பட்ட மொத்த மதிப்பீடான ₹14,600 கோடி ரூபாய அந்த வருமான வரி வசூலோட இணைச்சுப்பாருங்க. நான் ஒரு வருசத்துல வசூலான தொகைய மட்டும்தான் காட்டியிருக்கேன். திட்டத்துக்கு மத்திய திட்டக்குழு ஒப்புதல் அளித்த 2008 ஏப்ரல் மாதத்துல இருந்து கணக்கெப்போட்டா பல லச்சம் கோடி ரூபாய் வருமான வரி தமிழகத்துல இருந்து வசூலாகியிருக்கும். அந்தப் பணம்தான் இந்த திட்டத்துக்கு செலவாகியிருக்கு.இதுல இன்னும் மற்ற வரிகள நான் கணக்குல சேர்க்கலை.

தமிழக அரசுக்கும் பணம் மரத்துல காய்க்கலயே!!! 2013-14ல தமிழகத்தோட உத்தேச வரி வருமானம் ₹83,363 கோடி. அப்ப இந்த திட்டத்துக்கான ஆரம்பம் 2007ல விரிவான திட்ட மதிப்பீடு செய்ய மாநில அரசு ₹50 ஒதுக்கினதுதான். அப்ப இருந்து இப்ப வரை எத்தன் லச்சம் கோடி ரூபாய் வரியா தமிழக அரசுக்கு நாம சம்பாதிச்சுக் கொடுத்திருப்போம்?

அடுத்து அந்த ஜப்பான் காரன் தந்த கடனுக்கு வட்டியும் மொதலும்? அதான் குறைந்தபட்ச கட்டணம் ₹10 அதிகபட்ச கட்டணம் ₹40 னு நிர்ணயம் பண்ணியிருக்காங்களே!!! அது எங்க போகப்போகுதாம்?

எல்லாம் நம்ம உழைப்புல வந்த பணம். எந்த அரசனோ அரசியோ தனக்குப் பாத்தியமான நிலத்தோட வருமானத்துல இருந்து கட்டித்தந்த திட்டமில்லை இது. எந்த வள்ளலும் நமக்கு எழுதித்தந்த திட்டமில்லை இது.

சரி அப்போ நிர்வாகத்துல இருந்தவங்களோட சீரிய தொலைநோக்குக்கு உண்டான மரியாதைய நாம தரவேண்டாமா? தரனும்தான்... ஆனா அவங்கள நிர்வாகத்துக்குக் கொண்டு வந்ததே நாமதான. மறுபடியும் சொல்றேன், இது மன்னராட்சி இல்லை வாழ்த்துப்பா பாட. இது மக்களாட்சி. இங்க நடக்கிறது ஆட்சியில்லை. இது நிர்வாகம். அந்த நிர்வாகத்துக்கு நம்மோட பிரிதிநிதிகள தேர்தல் வச்சு நாமதான் தேர்ந்தெடுக்கிறோம்.

அப்ப யாருக்குத்தான் இந்த திட்டம் சொந்தம்? யாருக்கு இந்த புகழ் போய் சேரனும்? திட்டம் நமக்கு சொந்தம். இது அத்தியாவசியத் திட்டம்.ஒரு பிரம்மான்டமான மாநகரோட போக்குவரத்துத் தேவைக்காக காலம் கடந்து போடப்பட்ட திட்டம். நாம நமக்குனு செஞ்சுக்கிறதுல என்னயா புகழ் பெருமையெல்லாம்??!!

அநேகமா இது புரிஞ்சதாலதான் முதல்வர் எளிமையா வீடியோ கான்பிரன்சிங் முறையால திறந்து வச்சிருக்கனும். எதுக்கு மக்கள் பணத்த ஒரு ஆடம்பர விழா நடத்தி வீண் செலவு பண்ணனும்?

நாங்கதான்னு உங்ககிட்ட யாராச்சும் வந்தா, "நாங்கதான் உங்கள வச்சு அத செயல்படுத்தினோம்"னு திருப்பிச் சொல்லுங்க. அப்படியே "இப்பத்தான் மெட்ரோவோட முதல் கட்டத்துல ஒரு பங்கு நடைமுறைக்க வந்துருக்கு. மிச்சமிருக்கிறத சீக்கிரமா செயல்படுத்தப் பாருங்க. அப்படியே அடுத்த கட்டத் திட்டங்கள சீக்கிரமா ஆரம்பிக்கிற வழியப் பாருங்க. அப்பறம் சென்னை மட்டுமே தமிழகத்தோட ஒரே நகரம் கிடையாது. கோவை, மதுரை, சேலம்,திருப்பூர், நெல்லை, ஓசூர், தூத்துக்குடி, வேலூர், சிவகாசி, ஈரோடுனு இன்னும் எத்தனையோ நகரங்கள் உள்கட்டமைப்பு குறைவா அல்லாடிட்டு இருக்கு. அந்த நகரங்களோட தேவைகளையும் நிறைவேத்துங்க. இல்லாட்டி உங்க டெபாசிட்ட காலி பண்ணிடுவோம்"னு சொல்லுங்க...

சென்னை மெட்ரோ! இது நம்ம மெட்ரோ!