Friday, 18 April 2014

பெண்ணியமும் குடும்பமும்

குடும்பங்களைச் சிதைப்பது தான் பெண்ணியம் அல்லது பெண் விடுதலை என்று கொடுக்கப்படும் விளக்கங்கள் தர்க ரீதியாகவோ அல்லது நியாய ரீதியாகவோ எனக்கு உடன்பாடில்லாத ஒன்றாகத் தெரிகிறது. அதேபோல் ஆண்கள்தான் பெண்விடுதலையின் பொது எதிரிகள் என்று பொதுவாக வைக்கப்படும் கருத்தாக்கமும் எனக்குப் பிழையாகப் படுகிறது.

நான் எனது இந்த குறுகியகால வாழ்கையில் பார்த்த ஆண்களில், தங்கள் மனைவிமார்கள் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வருவதற்குள் உணவை சமைத்து வைத்துக் காத்திருக்கும் கணவன்மார்களைப் பார்த்திருக்கிறேன். எனக்குத் தெரிந்த பல (மனைவிகளும் சம்பாதிக்கும்) வீடுகளில் பெண்கள் தான் வீட்டின் நிதி நிர்வாகத்தைச் செய்கிறார்கள். சொத்து வாங்குவதிலாகட்டும், பண முதலீடுகளாகட்டும் பல வீடுகளில் பெண்கள் தான் முடியெடுக்கிறார்கள். எனது சம்பலத்தை அம்மாவிடம் குடுத்துவிட்டு அவரிடம் கைச்செலவுகளுக்கு காசு வாங்கிக் கொள்கிறேன். என் தந்தையும் அப்படித்தான். எனது வாழ்கையின் பல கருத்தாக்கங்களை கட்டமைத்தவர்கள் எனது ஆசிரியைகளும் எனது தாயாரும்தான். எனது இன்றைய முதலீட்டு முறைகளை வடிவமைப்பவர் எனது அக்காவும் அம்மாவும். எங்கள் வீடுகளில் பெண்கள் தான் மூளையும் முதுகெலும்பும். எனக்குத் தெரிந்த பல சம்பாதிக்கும் பெண்கள் தங்களது சம்பாத்தியத்தை தங்களது பிறந்த வீட்டிற்க்கு கொடுக்கிறார்கள், அதற்கு அவர்கள் கணவன்மார்களும் துனை நிற்கிறார்கள். பெண்களை மதிக்க வேண்டும் என்பதையும், எந்த இடங்களில் ஒரு பெண்ணுக்கு நான் துணை நிற்க வேண்டும், எந்த சமயங்களில் நான் ஒரு பெண்ணுக்குத் தோள் கொடுக்க வேண்டும் என்பதையும் என் அம்மா எனக்கு சொல்லித் தந்திருக்கிறார். எனக்கும் என் அக்காவிற்கும் இடையே வீட்டில் எந்த பேதமும் இருந்ததில்லை. அவர் விருப்பம் போல பிடித்ததைப் படிக்கும் உரிமை அவருக்கு இருந்தது. மாறாக எனக்குத் தான் எனது விருப்பம் போல படிக்க அனுமதி கிடைக்கவில்லை.

நமது குடும்பங்களில் என்றுமே பெண்களும் சமமாகத்தான் இருந்து வந்திருக்கிறார்கள். என்ன அவர்களுக்கு சில காலமாக சம்பாதிக்கும் உரிமை இல்லாமலிருந்தது. இன்று சுதந்திர இந்தியாவில் பல பெண்களுக்கு சம்பாதிக்கும் வாயப்பு கிடைத்திருப்பது ஆண் பெண் வேற்றுமையை இன்னும் குறைத்து வருகிறது. இன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக எனக்குத் தெரிவது பெண்கள் தான். பல நேரங்களில் பெண்களுக்கிடையிலான காழ்ப்புணர்வுதான் பல பெண்களின் முன்னேற்றத்தைப் பாதித்திருக்கிறது. எத்தனை மாமியார்கள் தங்கள் மருமகள் சம்பாதிப்பதையோ அல்லது தனது மகன் மருமகளுக்குச் சமைப்பதையோ மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்வார்கள்? எத்தனை பெண்கள் தங்கள் கணவன்மார்கள் அவர்களது அம்மாக்களுக்குப் பணிவிடை செய்வதை மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்வார்கள்?? ஆணைத் தங்களது பொக்கிசமாகப் பார்க்கும் பெண்களின் என்னம்தான் பிரச்சினைக்குக் காரணம். அதுவும் அவர்களது தவறல்ல, அப்படித்தான் மனித உயிரினம் பரினமித்திருக்கிறது. இதில் யாருடைய பொறுப்பு அதிகம்? நிச்சயமாக் அம்மாக்களுடையது தான். அம்மா என்ற உறவுக்கு மட்டும் தான் ஒரு ஆணுடைய கற்கும் பருவத்தில் அவனது கருத்தாக்கங்களைக் பாதிக்கக் கூடிய வல்லமை இருக்கிறது. ஒரு அம்மா, தான் தனது ஆண் சுற்றங்களிடம் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளை உணர்ந்தவுடன் அதனால் தான் படும் துன்பங்களையும், அந்த அடக்குமுறை எவ்வாறு மனிதமற்ற செயலாகுகிறது என்பதைத் தன் மகனுக்கு எடுத்துச் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார். அதோடு அவன் அவனது மனைவியையோ. மகளையோ, சகோதரிகளையோ அல்லது பொதுவாகப் பெண்களையோ எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், தனது விருப்பு வெறுப்புகளை அவர்களுடையதோடு எவ்வாறு பொருத்திப் பார்க்க வேண்டும் என்பதையும் அவனுக்குப் புரிய வைக்க வேண்டும். அதுதான் பொறுப்பான ஆண்மகனை இந்த சமூகத்திற்குக் தரும் வழி. மனைவிமார்களும் தங்களது சுதந்திரத்தைத் தங்கள் கணவன்மார்களிடம் சொல்லிவைப்பது நல்லதுதானே?? காதலிக்கும் பலரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுதானே இன்பம் காண்கிறார்கள்?? அப்படியிருக்கும் போது, ஒன்றாக தங்களது வாழ்கையை வாழப்போகும் இருவர் தங்களது விருப்புவெருப்புகளை அடுத்தவரிடம் சொல்லிவிடுவது நல்லதுதானே. ஒருமுறை சொல்லிப் பயனில்லையென்றால், மற்றுமொருமுறை சொல்லிப்பாருங்கள். சிலருக்கு ஒருமுறை சொனன்னால் புரியும். பலருக்குத் திரும்பத் திரும்பச் சொன்னால்தான் புரியும். இதுதான் எதார்த்தம். வீட்டுப் பொரியோர்களிடம் முறையிடுங்கள். நீதிமன்றத்தை கடைசி வாய்ப்பாகப் பயன்படுத்துங்கள். ஆண் அடிக்கக் கையோங்கினால், தடுத்துப் பழகுங்ககள், அடித்துவிட்டால் திருப்பி அடித்துவிடுங்கள், அவ்வளவுதான். இங்குதான் வளர்ப்பின் முக்கியத்துவம் வருகிறது, பெண்ணை அடிப்பது தவறு என்பதைக் ஆண்களுக்கு அவனது அம்மா சொல்லித் தர வேண்டும். அதோடு, பெண்ணை அவன் அடித்துவிட்டால், அவள் அவனைத் திருப்பி அடிப்பதை அவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் அவனுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இன்று இருக்கும் இளைஞர்களில் பலர் பெண்களுடன் சமமாக பள்ளி, கல்லூரிகளில் பயின்று, வேலை விசயமாக பல பெண்களுடன் பழகியும் வருகிறார்கள். வகுப்பில் ஒரு பெண் முதல் மதிப்பெண் எடுத்தால் பலரும் கைதட்டியிருப்பார்கள். ஆசிரியைகளின் அறவுரைகளுக்குச் செவிசாய்த்திருப்பார்கள். பெண் மேலாளர்களிடம் வேலை செய்திருப்பார்கள். பெண்கள் பல சாதனைகள் புரிவதைப் பார்த்துப் பிரமித்தும், மகிழ்ச்சியடைந்தும் இருப்பார்கள். இப்படியான ஆண் வர்கத்தை நம் சமுதாயம் சில நூரு வருட இடைவெளிவிட்டு இப்போதுதான் பார்க்கிறது. இந்த புதிய ஆண்வர்கத்தை அடிப்படையாக வைத்து பெண்களை மதிக்கும், பெண்களைப் போற்றும் ஒரு சமுதாயத்தைக் கட்டமைக்கும் பணி நமது குடும்பங்களுக்கு இருக்கிறது. குடும்பங்களை விட, அந்த ஆணின், பெண் சொந்தங்களுக்கு இந்த கடமை அதிகமாகவே இருக்கிறது.

நான் ஆண்களைப் பெண்கள் எப்படி அணுக வேண்டும் என்பதையும், குடும்பங்கள் தான் பெண் "விடுதலை"யை உறுதி செய்ய முடியும் என்பதையும் ஒரு ஆணின் பார்வையிலிருந்தும், அழகான குடும்பத்தில் வாழ்பவன் என்கிற முறையிலும் மேற்கண்டவாறு சொல்லியிருக்கிறேன்.

No comments:

Post a Comment