Sunday, 14 June 2015

அடிமைகள்

சே குவேரா.

அண்ணாரது பிறந்தநாளில் வாழ்த்துகளும் புரட்சிக்கோசங்களும் ஏற்கனவே நிறைந்து கிடக்கின்றன.

சே எனும் ஒரு ஆளுமை. போற்றப்படவேண்டியவர். அவரைப் பின்பற்றலாம். அவரது வாழ்க்கையைப் படித்து நமது வாழ்வியலை வடிவமைத்துக் கொள்ளலாம்.

இந்தப் பதிவு சே'வைப் பற்றியதல்ல.

வேறு இருவரையும் நமது பொதுப் புத்தியையும் பற்றியது. ஒரே காலகட்டத்தில் இருவரும் சாதித்தனர். அவர்களது சாதனையை அவர்கள் சார்ந்த சமூகங்கள் எப்படிக் கொண்டாடின என்பதைப் பற்றியது இந்தப் பதிவு. இரண்டாம் உலகப்போருக்காக உலகம் சித்தாந்தங்களின் அடிப்படையில் பிளவுபட்டுக் கொண்டிருந்த நேரமது. 1936. பெர்லினில் நடந்த ஒலிம்பிக் போட்டிதான் களம். அந்த ஒலிம்பிக்கை ஹிட்லர் ஆரிய இனத்தின் மேன்மையைக் காட்டும் போட்டியாகவும் நாசிக்களின் வல்லமையைக் காட்டும் போட்டியாகவும் நடத்தினார்.

முதலாமவர் ஜெஸ்ஸி ஓவன்ஸ் (Jesse Owens) எங்கோ கேள்விப் பட்ட பேராக இருக்கிறதா? நான் எனது பாத்தாம் வகுப்பு மெட்ரிக் பாடத்திட்டத்தில் இவரைப் பற்றி படித்தேன். இவர் ஒரு அமரிக்காவைச் சார்ந்த கருப்பின தடகள வீரர். நீளம் தாண்டுதலில் அன்றைய காலத்தில் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்த இருவரில் ஒருவர். அந்த இன்னொருவர் ஜெர்மனியின் லஸ் லாங் (Luz Long).ஹிட்லரின் செல்லப்பிள்ளை. லஸ் லாங்கின் வெற்றியை ஹிட்லர் எதிர்பார்த்து காத்திருந்தார்.

நமது நாயகரோ அமரிக்காவில் சம உரிமை கிடைக்கப்பெறாத கருப்பினத்தைச் சார்ந்தவர். எதிரியோ தாங்கள்தான் உலகின் உயர்ந்த இனம் என்று மார்தட்டிக்கொள்ளும் கூட்டத்தைச் சார்ந்தவர். போட்டியில் ஜெஸ்ஸி ஓவன்ஸ் வெற்றி பெருகிறார். அதை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக மேற்குலகம் கொண்டாடியது. நமது பத்தாம் வகுப்புப் பாடத்திட்டத்தில் வருமளவு சிறப்பிக்கப் பட்ட வெற்றி அது.

இரண்டாமவர், அந்த ஒலிம்பிக்கில் பங்குபெற்ற இந்திய ஹாக்கி அணி. ஒரு தனி நபர்ல்ல. தயான் சந்த் தலைமையில் சென்ற வளைமட்டைப்பந்தாட்ட அணி.

அந்த அணி அங்கு வரும் வரை செய்ததைப் பாருங்கள். 1928 ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக நடந்த ஒரு பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தில் வைத்து இங்கிலாந்து அணியைத் தோற்கடித்தனர். இங்கிலாந்து அந்த தோல்விக்குப் பின் இந்தியா சுதிந்திரம் அடையும் வரை தனது ஹாக்கி அணியை ஒலிம்பிக் கோட்டிகளுக்கு அனுப்பு மறுத்துவிட்டது. தனது அடிமைகளிடம் தோற்பதை அவர்கள் விரும்பவில்லை. அந்த ஒலிம்பிக் போட்டியின் இறுதியில் நெதர்லாந்து அணியைத் தோற்கடித்து தங்கம் வென்றனர். இதுதான் இந்தியா ஒலிம்பிக்கில் வென்ற முதல் தங்கப்பதக்கம்.

அடுத்து வந்த 1932ன் லாஸ் ஏஞ்சலீஸ் ஓலிம்பிக் போட்டிகளின் முதல் போட்டியில் ஜப்பானை 9-0 என்ற கணக்கில் வென்றவர்கள் இறுதியில் அமரிக்காவை 25-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றனர். இது இரண்டாவது தங்கப்பதக்கம்.

இப்போது 1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டி.  ஜெர்மனியுடன் நடந்த பயிற்சிப் போட்டியில் இந்தியா 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. கடந்த பத்தாண்டுகளில் அவர்கள் சந்தித்த ஒரே பெரும் தோல்வி இதுவாகத்தான் இருக்கவேண்டும். அடுத்து ஒலிம்பிக்கின் முதல் போட்டியில் ஹங்கேரியை 4-0 என்ற கணக்கில் தோற்கடித்து தங்களது வெற்றிப்பயணத்தை துவங்கினர். அடுத்தடுத்து அமரிக்காவை 7-0, ஜப்பானை 9-0 என்று தோற்கடித்துவிட்டு அரையிறுதியில் பிரான்ஸ் அணியை 10-0 என்ற கணக்கில் பந்தாடினர்.

இறுதியில் மீண்டும் ஜெர்மனி. இப்போது நம்மவர்களுக்கு சிறு பதட்டம். இயல்புதானே? போட்டி நடப்பது பெர்லினில். அவர்களோ தாங்கள்தான் உலகிலேயே உயர்ந்தவர்கள் என்று மார்தட்டிக்கொள்பவர்கள். இத்தனை ஆண்டுகளுல் தங்களைத் தோற்கடித்த ஒரே அணியும் ஜெர்மனி அணிதான். களத்துக்குப் போகும் முன் ஒருவர் இந்திய தேசியக் காங்கிரசின் மூவர்ணக் கொடியை எடுத்து வந்து துணிமாற்று அறையில் விரிக்கிறார். நம்மவர்கள் அந்த பொடிக்கு மரியாதை செலுத்திவிட்டு களம் புகுகிறார்கள். ஜெர்மனியை பெர்லினில் வைத்து 8-1 என்ற கணக்கில் தோற்கடித்து ஒலிம்பிக்கின் முதல் ஹாட்ரிக் ஹாக்கி தங்கப் பதக்கங்களை வென்று சரித்திரம் படைத்தனர்.

நிற்க. இப்போது ஜெஸ்ஸி ஓவன்சின் சாதனையை நான் இங்கு குறைத்து மதிப்பிடவில்லை. இரண்டும் சமமான சாதனைகள்தான். ஆனால் அவருக்கு அவரது தேசத்திலும் உலகம் முழுவதும் கிடைத்த அங்கீகாரமும் புகழும் நம்மவர்களுக்குக் கிடைக்கவில்லை. அந்த ஒலிம்பிக்கில் இந்திய அணியைத் தலைமைதாங்கி வழிநடத்தியவர் தயான் சந்த். அந்த மூன்று ஒலிம்பிக்கிலும் அதிக கோல் அடித்தவரும், ஹாக்கி போட்டிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோலடித்தவரும் என ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி எனப் போற்றப்பட்டவர். அவரது இறுதிக்காலத்தில் ஏழ்மையில் இறந்தது ஒரு சமூகமாக நமக்கு எவ்வளவு பெரிய அவமானம்?

இன்றும் நாம் மார்க்ஸ், லெனின், சே, பாப் மார்லே, எல்விஸ் பெர்ஸ்லீ, பீலே, ஷூமாக்கர் முதல் ஃபெடரர், ரொனால்டோ, மெஸ்ஸி, பெய்பர் வரை கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் நம்மிடம் அவர்களுக்கு இணை சொல்ல ஒருவரும் இல்லையா? அல்லது நமது பொதுப்புத்தி வெளிநாட்டினரை மட்டும்தான் கொண்டாடுமா?

யாரென்றே தெரியாமல்தான் பலரும் பாப் மார்லே படம் போட்ட துணிகளை அணிந்து கொண்டிருக்கிறார்கள். இந்த படம்போட்ட துணி அணிவதைக் குறைகூறவில்லை. ஆனால் அதுவே ஒரு நரேன் கார்த்திகேயனோ, சாய்னா நேவாலோ, மேரி கோமோ, ஆனந்தோ, மில்கா சிங்கோ அந்த துணியில் இருந்தால் விற்குமா? அல்லது போராட்டங்களைநும் பொதுக்கூட்டங்களையும் தவிர்த்து பாரதியையோ அல்லது அம்பேத்காரையோ  தன் துணியில் வைத்துக்கொண்டு எத்தனைபேர் கல்லூரி விழாக்களுக்கோ, கலை நிகழ்ச்சிகளுக்கோ போகிறோம்?

எப்படிப்பட்ட புரிதல் இது? நாம் எப்போதுமே நம்மை இரண்டாம் இடத்தில்தான் வைத்துக்கொள்ளப் போகிறோமா? அப்படி ஒரு தாழ்வு மனப்பாண்மை இருப்பதால்தானே நமது சர்வ வல்லமை படைத்த கிரிக்கெட் அணியால்கூட ஆஸ்திரேலியாவில் அவர்களைத் தோற்கடிக்க முடிவதில்லை.

ஒரு வித்தியாசத்தைப் பாருங்கள். வெள்ளையனுக்கு அடிமையாக இருந்தபோது அத்தனை வெள்ளையின அணிகளையும் அவர்களது ஊரில் வைத்து நமது ஹாக்கி அணியினர் தோற்கடித்தனர், வெள்ளையனை எதிர்த்து அமைதி முறையிலும் ஆயுதமேந்தியும் போராடி சுதந்திரம் வென்றோம், வெள்ளையனின் ஆட்சிக்காலத்திலேதான் அத்தனை கலாச்சாரத் தினிப்புகளையும் மீறி நமது கலாச்சார வேற்களைத் தோண்டி எடுத்தோம்! அப்போது நம்மாளும் முடியும் என்ற நம்பிக்கையும், நாம் யாருக்கும் அடிமையல்லை என்ற திமிரும் இருந்திருக்கும்தானே?

சே, ஐன்ஸ்டீன் போன்றோர் ஆளுமைகள். அவர்கள் இந்த உலகத்துக்குப் பொது. பாரதியும் ராமானுஜமும் அப்படிப்பட்டோர்தானே? அவர்களை நம்மாள் உலகத்துக்குப் பொதுவானவர்களாக அடையாளம் காட்டமுடியவில்லையே? ஏன் நம் சந்ததிகளிடமே கொண்டு சேர்க்க முடியவில்லையே?

நமக்கு நம்மீது நம்பிக்கை வரவேண்டும். நாம் செய்யும் சாதனைகளை முதலில் நாம் உணர வேண்டும். சச்சினின் சாதனைகளுக்கு ஒரு பிராட்மேன் சான்றிதழ் தரவேண்டிய அவசியமில்லை. நமக்கு அது சாதனைதான் என்ற புரிதல்வேண்டும். அப்படிப்பட்ட புரிதல் வந்தாலொழிய நாம் இந்த அடிமை மனநிலையை விட்டு வெளியே வரமாட்டோம்.

சேவும் பாரதியும் வர்க்கரீதியான அடிமைகளுக்காக மட்டும் போராடவில்லை, மனதளவில் அடிமைப்பட்டிருக்கும் நமக்கும் சேர்த்துதான் போராடினார்கள்.

No comments:

Post a Comment