சில மாதங்களுக்கு முன் ஒருநாள் பெங்களூருவிலிருந்து மைசூரு திம்பம் வழியாக சத்தி வந்துகொண்டிருந்தேன். திம்பம் மலைப்பாதையில் இறங்கும்போது இருபத்திநாலாவது சுற்றிலேயே பேருந்து நின்றுவிட்டது. காரணம் கீழே ஒரு வளைவில் ஒரு பழுவுந்து அச்சு முறிந்து பாதையை மறித்துக்கொண்டு நின்றதுதான்.. இது வழக்கமாக இந்த மலைப்பாதையில் நடப்பது...
அப்பொழுது காலை மணி எட்டு இருக்கும்.. எட்டு மணிநேரமாக பேருந்தில் வந்ததால் களைத்துப்போய் அரை நினைவாய் இருந்தேன்.. எல்லாரும் கீழே இறங்கி அதற்குள் முளைத்திருந்த தேனீர் குழம்பி, பனிக்கூழ், சிற்றுண்டி வண்டிகளை மொய்த்துக்கொண்டிருந்தனர்... இப்படியே ஒரு அரைமணிநேரம் போய்விட்டது.. ஒரு ஆப்பிரிக்காகாரனிடம் துருவிக்கொண்டிருந்தேன்.
ஒரு நான்கு அம்மத்தாக்கள் தங்களது வளைப்பைக்களைத் தூக்கிக்கொண்டு கீழே இறங்கினார்கள்.. இவங்க எங்க கிளம்பிட்டாங்க என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன்.. அப்போது அவர்களுக்குள் பேசிக்கொண்டது காதில் விழுந்தது.. "நங்க இவன் போமாட்டான் போல.. நாம அப்பவே கிளம்பியிருந்தா இன்னேரம் பாதிதூரம் போயிருக்கலாம்" என்று கொங்குத்தமிழில் பேசிக்கொண்டே இறங்கிப்போய்விட்டார்கள்...
"எங்கள் பழையபெண்கள் வீரத்திலும் உழைப்பிலும் இந்த துணைக்கண்டத்தையே அதகளம் பண்ணிய அந்த சோழர்காலத்து மனிதர்களுக்கு இணையானவர்கள்.. புயலடித்தாலும் அணலடித்தாலும் தாம் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருப்பார்கள், போக வேண்டிய இடங்களுக்குப் போய்க்கொண்டிருப்பார்கள்.. இந்த பெண்மனிகள்தான் கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்கு அச்சு.. இவர்களது உழைப்பும் சேமிப்பும்தான் இந்தப்பகுதியின் பெரும்தொழில்களுக்கு மூலதனத்தை அளித்தது. பாசத்துலையும் விருந்தோம்பலிலும் இவர்களை அடிச்சுக்கமுடியாது" இப்படியெல்லாம் அடுத்த ஐந்து நிமிடத்துக்கு பேருந்தின் விட்டத்தைப்பார்த்தபடி யோசித்துக்கொண்டிருந்தேன்.
பிறகுதான் நினைவு வந்தது.. "ஆமா இந்த கொங்கு மண்டலமும் தமிழ்நாடும் உருப்புடாப்படித்தான்.. பக்கி இங்கயே உக்காந்துருக்க? அவங்க அத்தன அம்மச்சிகளும் கூடைய தலையில வச்சுக்கிட்டுப் போய்ட்டாங்க வயசுப்பையன் விட்டத்தப் பாத்துட்டு உக்காந்துருக்க?? கெளம்பு" என்று என் அம்மா எப்போதும் திட்டுவதுபோல் திட்டுவதாக காதில் விழுந்தது.. உடனே பேருந்தைவிட்டு இறங்கி விறுவிறுவென நடக்க ஆரம்பித்தேன்..அவர்களை இருபதாவது சுற்றில் வைத்துப்பிடித்தேன்... மேலும் சில அம்மத்தாக்களும் அம்மாக்களும் அய்யாக்களும் அந்த வரிசையில் இணைந்திருந்தார்கள்...
மேலும் சில சுற்றுக்கள் போனபிறகு பாதையில் வாகனங்கள் ஏதுமில்லாது நாங்களும் காடும் மட்டுமே என்றானது.. அப்போதுதான் இங்க ஒரு சிறுத்தைப்புலி மனுசங்கள சாப்பிட்டுட்டு இருக்க நினைப்பு வந்தது!?!? அப்போது முன்னே போன கொழுந்தியா தன் நங்கையிடம் கேட்டார் "நங்க இங்க ஒரு புலி சுத்துதாமே" "ஏங்கொழுந்தி! என் தம்பியவே அடக்கி வச்சுருக்கியாம்!! இந்த புலி வந்தா மொரத்துல அடிச்சு தொரத்தமாட்டியா?" "அதுக்கென்னங்கோ!! அடிச்சு தொரத்துனாப் போச்சு.. அப்படி நமக்கு அடங்களைனா என்ன? அதான் கூடவே நல்லா வாட்டசாட்டமா பேரப்புள்ளை ஒன்னு வருதுலோ! " என்றார்... எல்லாரும் சிரித்துவிட்டார்கள்.. யாரப்பா அது கூடவே வர்ர பேரப்புள்ளை என்று திரும்பிப் பார்த்தேன்!! யாருமில்லை, என்னைத்தான் சொல்கிறார்கள் என்று தெரிந்தது...
பண்ணாரியாத்தாதான் இவர்கள் ரூபத்தில் வந்திருக்கும்போல என்று நினைத்தபடியே அவர்களுடன் இறங்கிக்கொண்டிருந்தேன்...
No comments:
Post a Comment